சென்னை : ‘பிரதமர், முதல்வர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணிகளை, ஆர்.டி.ஐ., வாயிலாக மக்கள் அறிந்து கொள்ள, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மாநில தகவல் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.
சென்னை, திருவொற்றியூரை சேர்ந்த துாயமூர்த்தி என்பவர், 2021-ல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு: அரசியல்வாதிகளை குறை சொல்வதை, நவீன சமுதாயத்தில் பெருமையாக கருதுகின்றனர். ஏராளமான எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் நல்லது செய்கின்றனர்; அதை யாரும் பாராட்டுவதுஇல்லை.
ஓட்டு போடுவது பற்றிய தவறான கருத்தால் தான், ஓட்டு சதவீதம் குறைகிறது. சென்னையில் சில வார்டுகளில், 31 சதவீதம் ஓட்டு பதிவாகிஉள்ளது. இப்படி ஓட்டு சதவீதம் குறைந்தால், ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு விடும். இந்த நிலை வந்து விடக் கூடாது. இந்த தகவல்களும் மக்களுக்கு தெரிய வேண்டும்.
பிரதமர், முதல்வர்கள், மத்திய – மாநில அமைச்சர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்யும் மக்கள் பணிகள், ஆர்.டி.ஐ.,-யின் கீழ் கிடைக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், 100 சதவீத ஓட்டுப் பதிவு சாத்தியமாகும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.