‘பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி குறித்த தகவல்களை இணையத்தில் வெளியிடுக’


சென்னை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி படிப்புகள் குறித்து சிவக்குமாரும், பல்கலைக்கழகங்களில் மேற்காெள்ளப்படும் ஆராய்ச்சி படிப்புகள் குறித்து கார்த்தி ஆகியோரும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் மனு அளித்தனர்.
அதற்கான தகவல்களை பொதுத்தகவல் வழங்கும் அலுவலர்கள் முழுமையாக அளிக்காத நிலையில், தகவல்களை வழங்கக்கோரி மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரணை செய்த பின்னர், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முத்துராஜ் அளித்துள்ள உத்தரவில், ‘உயர் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆராய்ச்சி குறித்த விவரங்கள் இணையத்தில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மாணவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் எளிதாக பெறும் வகையில் ஆன்லைன் அப்ளிகேஷன் நிலை மற்றும் ஆராய்ச்சி குறித்த தகவல், சட்டம், விதிமுறைகள், ஆண்டு அறிக்கை உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் இணையதளத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் இதுகுறித்து 2023 ஜனவரி 5ஆம் தேதி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பதிவாளர்கள், ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக பிஹெச்டி ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் உள்ளுர் சம்பந்தமான ஆராய்ச்சி படிப்புகள் குறைவாகவே நடைபெறுகின்றன.
தென்மாவட்டங்களில் பெரும்பாலும் சீமைக் கருவேல மரங்கள் (Prosopis juliflora அறிவியல் பெயர்) எங்கு பார்த்தாலும் இருக்கும். ஆனால், தென்மாவட்டங்களில் இருக்கும் பல்கலைக் கழகங்களின் தாவரவியல் துறையில் சீமைக் கருவேல மரம் சம்பந்தமாக எந்த மாணவரும் ஆராய்ச்சி படிப்பு மேற்காெள்ளவில்லை.
எனவே, இது மாதிரியான உள்ளூரில் அதிகமாக இருக்கக்கூடிய வேப்பமரம், புளியமரம், உட்பட உள்ளூர் தாவரங்கள் குறித்தும் ஆராய்ச்சிகளை தாவரவியல் துறையில் மேற்காெள்ள ஆய்வு மாணவர்களை அறிவுறுத்த சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக துறைத்தலைவர்களும், ஆராய்ச்சி வழிகாட்டிகளும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட நிர்வாக மாவட்டங்களில் சிவகாசிப் பகுதியில் உள்ள பட்டாசுத் தொழில், அச்சுத்தொழில் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். இதனால் அரசு அமைப்புகளுக்கு திட்டங்களை வகுப்பதற்கும், அந்தப் பகுதி மக்களும் பயன் ஏற்படுத்தும்’ என அதில் கூறியுள்ளார்.

Leave a Reply